அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிறுவனுக்கு நீதி கோரி உறவுகள் போராட்டம்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் ஊர்காவற்துறை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது சிறுவனின் இறுதிச்சடங்குகள் இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன.
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் ஊர்காவற்துறை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது சிறுவனின் இறுதிச்சடங்குகள் இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன.
இறுதிச்சடங்குகளுக்குப் பின்னர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பதாகைகள் ஏந்தி, சிறுவனின் சடலத்துடன் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் “பொலிஸாரை கைது செய்”, “எமது பிள்ளைக்கு நீதி வேண்டும்”, “பொலிஸாரின் அநீதி தொடர்கிறது” போன்ற கோஷங்களை எழுப்பினர். பின்னர் சிறுவனின் உடல் நவாலி இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி அதிகாலை அல்லைப்பிட்டி சந்திப்பு அருகில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான ஒரு வேனை நிறுத்துமாறு பொலிஸார் சைகை செய்தபோதும், அந்த வாகனம் உத்தரவை மீறி மண்டைதீவு நோக்கி வேகமாகச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பான தகவல் ஊர்காவற்துறை பொறுப்பதிகாரி பயணித்த ஜீப்பிற்கு வழங்கப்பட்டு, அந்த வாகனத்தை இடைமறிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பலமுறை வாகனத்தை நிறுத்த முயற்சித்தபோதும் அது நிற்காத நிலையில், முதலில் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், பின்னர் வேனை நிறுத்தும் நோக்கில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் வாகனத்தை ஓட்டிய இளைஞர் கடுமையாக காயமடைந்து யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த வேளையில் வாகனத்தில் இருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸாரும் யாழ்ப்பாண குற்றப் புலனாய்வு பிரிவும் முன்னெடுத்து வருகின்றன.