மடு யாத்திரை சோகமாக மாறியது: வெடிக்காத பட்டாசை மீண்டும் பற்றவைக்க முயன்ற யாழ். இளைஞன் பரிதாப பலி!
யாழ்ப்பாணம் - குருநகர் ஐந்து மாடி குடியிருப்புப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை இடம்பெற்ற பட்டாசு விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 02 மணியளவில் இந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மடு மாதா ஆலய யாத்திரைக்காக பக்தர்கள் புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது வெடிக்காமல் இருந்த ஒரு பட்டாசை மீண்டும் பற்றவைத்து வெடிக்கச் செய்ய அந்த இளைஞன் முயன்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், அவர் அருகில் சென்ற தருணத்தில் அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.