விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக பொய்த் தகவல் பரப்பியவர் கைது
சமூக வலைத்தளங்கள் ஊடாக வீடியோ மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத மற்றும் பொய்த் தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் 46 வயது நபரொருவர், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை, நேற்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர், சமூக வலைத்தளம் ஒன்றின் ஊடாக வீடியோ வெளியிட்டதுடன், செய்தியாளர் சந்திப்பொன்றையும் நடத்தி, கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) தொடர்பான பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், அவர் வெளியிட்ட தகவல்களுக்கு உரிய ஆதாரங்கள் அல்லது உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல்கள் எதுவும் இல்லாத நிலையில், அவை பொய் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் தகவல்களைப் பரப்பியமை தொடர்பிலேயே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பெல்லன்வில, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வேகமாகப் பரவும் நிலையில், அவற்றை பகிர்வதற்கு முன்னர் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.