பேசாலையில் மர்ம மரணம்? புதரில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு; தீவிர விசாரணை!
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை பொலிஸ் பிரிவின் பேசாலை 8ஆம் வட்டாரத்தில் உள்ள புதர் நிறைந்த பகுதியில் இருந்து 41 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம், நேற்று வெள்ளிக்கிழமை (07) மதியம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த அப்பகுதி மக்கள், உடனடியாக கிராம உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, கிராம உத்தியோகத்தர் ஊடாக சம்பவம் தொடர்பில் பேசாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பேசாலை பொலிஸார், சடலத்தை மீட்டு, மேலதிக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலமாக மீட்கப்பட்டவர் பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (வயது 41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவர் சடலமாக மீட்கப்பட்ட இடத்திலிருந்து சிறிது தொலைவிலேயே அவரது வீடு அமைந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த நபரின் தொலைபேசித் தொடர்பு நேற்று முன்தினம் (06) காலை சுமார் 7.30 மணிக்குப் பின்னர் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு மற்றும் தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பேசாலை பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்து, மரணத்துக்கான காரணத்தை கண்டறியும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இது இயற்கையான மரணமா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பேசாலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.