லண்டன் - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை: பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் மனு
பிரித்தானியாவின் லண்டன் நகருக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி, பிரித்தானிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கேரத் தோமஸ் விசேட கையெழுத்து மனுவொன்றை ஆரம்பித்துள்ளார்.
வடக்கு இலங்கையுடன் குடும்ப மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளைக் கொண்டுள்ள பிரித்தானியத் தமிழ் மக்களின் பயண வசதிகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
"யாழ்ப்பாணத்துக்கான நேரடி விமான சேவையை கொண்டு வாருங்கள்" எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மனுவில், பிரித்தானியத் தமிழ் குடும்பங்கள் திருமண நிகழ்வுகள், அந்தியேட்டி மற்றும் இறுதிச் சடங்குகள், சமய வழிபாட்டு உற்சவங்கள் மற்றும் உறவினர்களைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கும் போது எதிர்கொள்ளும் சிரமங்கள் விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஹரோ வெஸ்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான கேரத் தோமஸ் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது லண்டனுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் இல்லாத காரணத்தால், பயணிகள் கொழும்பு ஊடாகப் பயணித்து அங்கிருந்து மேலும் சுமார் 400 கிலோமீட்டர் தூரத்துக்கு மேலதிக பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான தரைவழி அல்லது ரயில் வழிப் பயணத்துக்கு சுமார் 6 முதல் 7 மணித்தியாலங்கள் வரை செலவாவதாகவும், இது முதியவர்கள், சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்கள் மற்றும் அவசர குடும்ப நிகழ்வுகளுக்காகச் செல்வோர் மத்தியில் கடுமையான சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் மனுவில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த நேரடி விமான சேவையானது பயண நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதுடன், பயண இலகுவை அதிகரித்து பிரித்தானியாவுக்கும் வடக்கு இலங்கைக்கும் இடையிலான குடும்ப, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் பலப்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், வட மாகாணத்தின் சுற்றுலாத்துறை, நேரடி முதலீடுகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கும் இது பாரிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையில் வர்த்தக ரீதியாக சாத்தியமான நேரடி விமான சேவையை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்து ஆதரவளிக்குமாறு பிரித்தானிய அரசாங்கம், இலங்கை அதிகார சபைகள், விமான நிறுவனங்கள் மற்றும் லண்டன் விமான நிலையங்களை கேரத் தோமஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை, இந்த விமான இணைப்பு முயற்சியை வலுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மனுவில் இணைந்து கையெழுத்திடுமாறு பொதுமக்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.