சில மாவட்டங்களில் மழை சாத்தியம் – கடல் பகுதிகளுக்கு விசேட எச்சரிக்கை
கடலில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகளுக்காக விசேட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் இன்று (09) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பொதுவாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அதிகாலை நேரங்களில் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகளுக்காக விசேட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவிலில் இருந்து மட்டக்களப்பு வரை மற்றும் களுத்துறையிலிருந்து காலி வழியாக மாத்தறை வரை உள்ள கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும் களுத்துறையிலிருந்து கொழும்பு, புத்தளம் வழியாக மன்னார் வரை மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரை உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில வேளைகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக காணப்படும் அபாயமும் உள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களையும் கருத்தில் கொண்டு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவசர நிலை ஏற்படும் போது 117 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.