விண்ணில் ஓர் அற்புதம்: இன்று அரிய முழு சூரிய கிரகணம் - இலங்கையில் காண முடியுமா?
விண்ணில் நிகழும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வான அரிய முழு சூரிய கிரகணம் இன்று (12) நிகழ்கிறது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்பட்டு பகல் நேரத்திலேயே வானம் இருண்டு மாலை போன்ற சூழல் உருவாகும்.
இந்த நிகழ்வின் போது சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிக்கும்.
எனினும், இந்த அரிய காட்சியை இலங்கையில் எந்தப் பகுதியிலும் காண முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், கிரகணம் நிகழும் நேரத்தில் இலங்கையில் இரவு நேரமாக இருப்பதே ஆகும்; இலங்கை நேரப்படி இரவு சுமார் 11:16 மணிக்கே இது நிகழ்கிறது.
இந்த கிரகணத்தின் பாதை கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் வடக்கு ரஷ்யா வழியாகச் செல்கிறது.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் பகுதி சூரிய கிரகணத்தைக் காண முடியும். மேலும், அடுத்த ஆண்டு 2027 ஓகஸ்ட் மாதத்தில் நிகழவுள்ள முழு சூரிய கிரகணத்தையும் இலங்கையில் இருந்து காண முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.