இன்று முதல் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!
இன்று (03) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று 5 பகுதிகளில் சூரியன் உச்சம்
இதேவேளை, சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டம்பர் 07ஆம் திகதி வரை இலங்கைக்கு அருகிலுள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (03) நண்பகல் 12.09 மணியளவில் மாதம்பே, தோரயாய, தொட்டகமுவ, ரத்தோட்ட மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.