சீரற்ற வானிலையால் அவசர நடவடிக்கை: யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்ல தடை
சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் காரணமாக, யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரையிலான கடல் பகுதிகளில் சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை வலுப்பெறுவதால், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தலைமையில் வெளியிடப்பட்டுள்ள அவசர அறிவிப்பில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை வரையிலான கடற்கரைப் பகுதிகளில் இயங்கும் சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் மறுஅறிவிப்பு வெளியாகும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதுடன், கடல் அலைகளும் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய படகுகளில் கடலுக்குச் செல்வது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ள சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் உடனடியாக பாதுகாப்பான கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும், இரவு நேரங்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் தேவையற்ற ஆபத்துகளைத் தவிர்க்குமாறும் மீனவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் மீன்பிடி திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த வானிலை மற்றும் கடல் தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, உயிர் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி செயல்படுமாறும் மீனவர் சமூகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.