கங்காராமய ஏரியைத் தூய்மைப்படுத்தத் தனியார் நிதிப் பங்களிப்பு: கடல் நீரைப் பயன்படுத்தும் புதிய திட்டம்
கொழும்பு - கங்காராமய பகுதி பேரே (Beira) ஏரியைத் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு குறுகிய கால தீர்வாக, கடல் நீரைப் பயன்படுத்தும் சிறப்புத் தொழில்நுட்பத் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இத்திட்டத்துக்கான முழுமையான நிதிச் செலவையும் பொறியாளர் நஹில் விஜேசூரியா வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஹுணுபிட்டி, கங்காராமய விகாரையில் நேற்று வியாழக்கிழமை (09) நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டம், கங்காராமய விகாரையின் தலைமைத் தேரர் வணக்கத்துக்குரிய கிரிந்தே அசாஜி தேரர் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் (SLLDC) ஏரியின் 35 இடங்களில் நடத்திய நீர் தரப் பரிசோதனையில், நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் அமோனியா போன்ற மாசுக்கள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து, ஏரி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏரியில் மிதக்கும் கழிவுகளை அகற்றுதல், நீர்வாழ் களைகளை நீக்குதல் மற்றும் கரைகளைச் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை SLLDC ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, கங்காராமய விகாரைக்கு அருகிலுள்ள தென்மேற்குப் பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும், நீண்ட காலத் திட்டமாக இந்த ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ், கொழும்பு மாநகர சபை, நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபை (UDA) மற்றும் SLLDC ஆகியன இணைந்து ஏரியைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.