இன்று நண்பகல் 12:10 மணிக்கு இலங்கையின் 5 பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்!
இலங்கையின் சில பகுதிகளில் இன்று (02) நண்பகல் 12:10 மணியளவில் சூரியன் நேர் உச்சியில் காணப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியன் தெற்கு நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அருகிலுள்ள அட்சரேகைப் பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று நண்பகல் 12:10 மணிக்கு ஆனைமடு, மொரகொல்லகம, தம்புள்ள, மணம்பிட்டிய மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனிடையே, எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானமாக இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.