நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: 100 மிமீ அதிக பலத்த மழைக்கு வாய்ப்பு
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், நேற்றிரவு (02) 11 மணியளவில் நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது. கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட (Level 2) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட (Level 1) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த மழைக்கு வாய்ப்பு
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பின்படி, சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் மேகமூட்டமான வானிலை காணப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கடற்றொழிலாளர்களுக்கான எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இக்கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அலைகளின் உயரம் சுமார் 2.5 - 3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு நிலவுகிறது.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
