மும்பையில் மின்தூக்கியில் பலூன் வெடிப்பு: இளம் மாணவி உள்ளிட்ட இருவர் காயம்
குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் பிறந்தநாள் விழாவுக்காக பலூன்களை ஆர்டர் செய்திருந்தார். அவற்றை வழங்குவதற்காக மஹாட்டொ, அந்த கட்டடத்துக்கு வந்திருந்தார்.
இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற விபத்தில் பலூன்கள் வெடித்ததால் இளம் மாணவி ஒருவரும் விநியோக ஊழியர் ஒருவரும் தீக்காயமடைந்தனர். இந்தச் சம்பவம் கடந்த 2ஆம் தேதி திங்கட்கிழமை ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மின்தூக்கியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 21 வயதான ஹிமானி தாப்பிரியா மற்றும் 32 வயதான விநியோக ஊழியர் ராஜு குமார் மஹாட்டொ தீக்காயமடைந்தனர். குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் பிறந்தநாள் விழாவுக்காக பலூன்களை ஆர்டர் செய்திருந்தார். அவற்றை வழங்குவதற்காக மஹாட்டொ, அந்த கட்டடத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் மின்தூக்கியில் சென்றபோது தாப்பிரியா மற்றும் மற்றொருவரும் உடன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலூன்களில் வெவ்வேறு வகையான வாயுக்கள் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மின்தூக்கியில் இருந்தபோது திடீரென சில விநாடிகளில் பலூன்கள் வெடித்துச் சிதறின. இந்த வெடிப்பால் தீப்பற்றிய நிலையில் பின்னர் அது விரைவாக அணைந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக பலூன் கடை உரிமையாளருக்கு எதிராக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.