அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை – ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் இன்று (16) நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் தொடரின் 30-வது லீக் போட்டியில், இலங்கை அணி, அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி உத்தியோகபூர்வமாக ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலிய அணிக்காக ட்ராவிஸ் ஹெட் 29 பந்துகளில் 56 ஓட்டங்களையும், அணித்தலைவர் மிட்செல் மார்ஷ் 27 பந்துகளில் 54 ஓட்டங்களையும் விளாசி சிறப்பான ஆரம்பத்தை வழங்கினர். முதல் விக்கெட்டுக்காக வலுவான அடித்தளம் அமைந்த போதிலும், இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர்கள் போட்டியின் மத்திய கட்டத்தில் ஆட்டத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
இதன் விளைவாக மத்திய வரிசை வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்ததால், அவுஸ்திரேலிய அணியால் 200 ஓட்டங்களைத் தாண்ட முடியாமல் போனது. ஜோஷ் இங்கிலிஸ் 27 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணி சார்பில் துஷான் ஹேமந்த 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மதீஷ பத்திரண 0.4 ஓவர்கள் வீசிய நிலையில் உபாதை காரணமாக வெளியேறியது அணிக்குச் சிறிய பின்னடைவாக அமைந்தது.
182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலடி கொடுத்த இலங்கை அணி, 18 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டு அபார வெற்றியை உறுதி செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் பெத்தும் நிஸ்ஸங்க, 52 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்குத் தளமாக இருந்தார். அவருக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கிய குசல் மெந்திஸ் 51 ஓட்டங்களைப் பெற்றார். இளம் வீரர் பவன் ரத்நாயக்க ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை நிறைவு செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் ‘குரூப் B’ பிரிவிலிருந்து இலங்கை அணி அடுத்த கட்டமான ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது.