தரமற்ற LED மின்விளக்குகளுக்குத் தடை: மீறுபவர்கள் மீது சட்டம் பாயும் என அரசு எச்சரிக்கை
இலங்கையில் முறையான தரநிலைகள் இல்லாத எல்இடி (LED) மின்விளக்குகளை இறக்குமதி செய்வது, சேமித்து வைப்பது மற்றும் விற்பனை செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை மீறி செயல்படும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விற்பனை செய்யப்படும் எல்இடி மின்விளக்குகளின் கவர், உறை அல்லது பெட்டிகளில் குறைந்தபட்ச எரிசக்தி செயல்திறன் லேபிள் (Minimum Energy Performance Label) ஒட்டப்பட்டிருப்பது இனி கட்டாயமாகும்.
குறிப்பாக, 60 வோட் (Watts) அல்லது அதற்கும் குறைவான மின் நுகர்வு கொண்ட எல்இடி மின்விளக்குகளில் இந்த எரிசக்தி லேபிள் இல்லாமல் விற்பனை செய்வது கடுமையான தடைக்கு உட்பட்டுள்ளது.
2020 மே 28ஆம் திகதியிட்ட 2177/3ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ், இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.
தரமற்ற மின்விளக்குகள் விற்பனை செய்யப்படுவது குறித்து ஏற்கெனவே நாடு முழுவதிலும் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், அதிகார சபையினர் அதிரடி சோதனைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குத் தொடரப்படும்.
எரிசக்தி சிக்கனம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இத்தகைய தரமற்ற மின்விளக்குகளை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
மின்சாரத்தை சேமிப்பதற்கும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தரமான மின்விளக்குகளை பயன்படுத்துவது அவசியம் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.