சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – மார்ச் 9ல் முக்கிய விவாதம்

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வரும் மார்ச் 9ஆம் தேதி விவாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெப்ரவரி 11, 2026 - 15:25
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – மார்ச் 9ல் முக்கிய விவாதம்

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வரும் மார்ச் 9ஆம் தேதி விவாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ராணுவ தளபதி நரவணே எழுதியதாக கூறப்படும் வெளியிடப்படாத சுயசரிதை நூலில் இடம்பெற்ற இந்தியா – சீனா எல்லை மோதல் தொடர்பான தகவல்களை மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

இந்த விவகாரத்தை தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி முதல் மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க இருந்த நிலையில், சில காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கை அருகே வந்து குழப்பம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகக் கூறி, பிரதமர் அவைக்கு வர வேண்டாம் என சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. இதனால் பிரதமரின் உரை இல்லாமலேயே கடந்த 5ஆம் தேதி நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் தற்போது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை சபாநாயகர் இருக்கையில் அமர மாட்டேன் என ஓம் பிர்லா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 96ன் படி, தமக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தில் சபாநாயகர் வாக்களிக்க முடியும். ஆனால் வாக்குகள் சமமாக இருக்கும் சூழலில் அவர் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்மானத்திற்கு 118 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து நோட்டீஸ் வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. சபாநாயகரை பதவியில் இருந்து நீக்க மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு அவசியமாகும். தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவையில் தெளிவான பெரும்பான்மையைக் கொண்டுள்ளதால், இந்த தீர்மானம் நிறைவேறும் வாய்ப்பு குறைவு என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இருப்பினும் சபாநாயகரின் செயல்பாடுகள் மீது தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யவும், விவாதத்தின் மூலம் குறைகளை வெளிப்படுத்தவும் எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை அரசியல் ரீதியாக முன்னெடுத்து வருகின்றன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!