கோவிலுக்கு சென்ற குடும்பத்தில் சோகம்; செல்ஃபி எடுக்க முயன்றபோது 5 பேர் பலி
கர்நாடக மாநிலத்தில் கோவிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், காவிரி ஆற்றில் செல்ஃபி எடுக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராம்நகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகாவைச் சேர்ந்த குடும்பத்தினர், மாண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தத்தி ராயா கோவிலுக்கு சென்றுள்ளனர். சுவாமி தரிசனத்தை முடித்த பின்னர், அருகில் பாயும் காவிரி ஆற்றை பார்வையிட சென்றனர்.
அப்போது ஆற்றின் ஆழம் குறித்து அறியாமல் சிலர் நீரில் இறங்கி புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென நீரில் விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற முயன்ற மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக நீரில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் விஜயம்மா (50), ஸ்வேதா (38), பிரியங்கா (28), சைத்ரா (20), மகேஷ் (22) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த சுற்றுலா பயணிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
ஒரு குடும்பமே செல்ஃபி எடுக்க முயன்றபோது காவிரி ஆற்றில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தான நீர்நிலைகளில் புகைப்படம் எடுக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.