அக்குரேகொட இரட்டைக் கொலை: தீக்கிரையாக்கப்பட்ட காரில் இரசாயன ஆய்வு – சகோதரர்களை தடுத்து வைக்க உத்தரவு

கடந்த 15ஆம் திகதி காலி, அகலிய – குட்டியாவத்தை உட்புற வீதியில் இந்தக் காரை நுகேகொட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.

பெப்ரவரி 17, 2026 - 15:00
அக்குரேகொட இரட்டைக் கொலை: தீக்கிரையாக்கப்பட்ட காரில் இரசாயன ஆய்வு – சகோதரர்களை தடுத்து வைக்க உத்தரவு

அக்குரேகொட இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும், காலி – பத்தேகம, அகலிய பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்ட காரை பரிசோதிப்பதற்காக அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் இன்று (17) முற்பகல் அந்த இடத்திற்கு நேரில் சென்றனர்.

கடந்த 15ஆம் திகதி காலி, அகலிய – குட்டியாவத்தை உட்புற வீதியில் இந்தக் காரை நுகேகொட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது கார் முழுமையாக தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்தக் கார், காலி – அகலிய பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அந்த இடத்துக்குச் சென்றபோதே, கார் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும் மேலதிக விசாரணைக்காக நாளை (18) வரை தடுத்து வைத்து விசாரிக்க கடுவெல நீதவான் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!