கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்களும் பதவி துறக்க வேண்டும்; ஆனந்தசங்கரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாகத் தமது பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாகத் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி. கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "சம்பந்தன் மட்டுமல்ல 2004ஆம் ஆண்டு துரோகத்தனத்தால் தமிழர்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து பாராளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாகத் தமது பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும். இதுவே காலத்தின் கட்டாயமும் தேவையுமாகும்.
அதுமட்டுமல்ல அழிந்துபோன தமிழர்களின் ஜனநாயக மரபைக் கட்டிக்காப்பதற்கும் தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷைகளை மீண்டும் நம்பிக்கையோடு கட்டியெழுப்பவதற்கும் இவர்கள் அனைவரும் இராஜினாமா செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.