'ஈஸ்டர் உயிரிழப்புக்களுக்காக மெழுகுவர்த்திகளை ஏந்தினோம்; தற்போது பஹல்காமிற்காகவும் மெழுகுவர்த்திகளை ஏந்தும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது'
ஆண்டுதோறும் வரும் நினைவேந்தல் என்ற சொல்லுடன் இலங்கை மக்களுக்கு தனித்துவமான பிணைப்புண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று, இலங்கைத்தீவு அமைதியில் ஆழ்கிறது. 2019-இல் குண்டுவெடிப்புக்கு உள்ளான தேவாலயங்கள் நினைவஞ்சலி கூட்டங்களை நடத்துகின்றன.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உறவுகளை இழந்த குடும்பங்கள் இருளில் மெழுகுவர்த்திகளை ஏற்றுகின்றன. வருடங்கள் ஏழு கடந்துள்ளபோதும் காயங்கள் குணப்படுத்தப்படவில்லை. காயங்கள் எவ்வளவு ஆழமானவை என்பதைப் பற்றிய புரிதலைத் தான் கூர்மைப்படுத்துகிறது.
தற்போது இந்தியாவும் அத்தகையதொரு துயரத்தின் முன் நிற்க வேண்டிய நிலைக்கே வந்துள்ளது. பஹல்காம் அருகிலுள்ள பைசரன் பள்ளத்தாக்கில் 26 பொதுமக்கள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இந்தத் தருணத்தில் முக்கியமான கேள்விகள் இன்னும் நேர்மையான பதில்களைக் கோரிநிற்கின்றன. குறித்த சம்பவம் 2025 ஏப்ரல் 22 அன்று நடந்த தற்செயலான ஆத்திரமூட்டும் செயலல்ல. ஜம்மு-காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது என்ற கருத்தியலின் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலாகும்.
2024ஆம் ஆண்டில் மட்டும் அந்தப் பள்ளத்தாக்கு சுமார் 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவேற்றிருந்தது. புதுமணத்தம்பதிகள், குடும்பங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பஹல்காம், குல்மார்க் மற்றும் சோன்மார்க் ஆகிய இடங்களின் விடுதிகளில் குவியத் தொடங்கியிருந்தனர்.
கஷ்மீரில் 2019 இல் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு சுற்றுலாத்துறை வேகமான வளர்ச்சியைக் காண ஆரம்பித்தது, அவ்வாறான நிலையில் லஷ்கர்-இ-தொய்பாவின் மூலம் அத்துறையைச் சிதைப்பதே ஐ.எஸ்.ஐ.எஸ் இன் இலக்குவைக்கப்பட்ட நோக்கம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தப் படுகொலைகள் மக்களைக் கொல்வதற்காக மட்டுமல்ல, நம்பிக்கையைக் கொல்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டதாகும். பஹல்காம், குல்மார்க் மற்றும் சோன்மார்க் முழுவதும் உள்ள விடுதிகளில் முன்பதிவுகள் ஒரே இரவில் இரத்து செய்யப்பட்டன,
இதனால் உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் கடைக்காரர்கள் கோடிக்கணக்கான ரூபா இழப்பைச் சந்திக்க நேரிட்டது. அந்தத் தாக்குதலின் கொடூரத்தை எழுத்துக்களால் விவரிப்பது சாத்தியமற்றது.
எம்-4 கார்பைன்கள் மற்றும்; ஏ.கே-47 ரகத் துப்பாக்கிகளுடன், பயங்கரவாதிகள் சுற்றியுள்ள காடுகள் வழியாக பைசரன் பள்ளத்தாக்கிற்குள் நுழைந்தனர். அவர்கள் ஆண்களைத் தனியாகப் பிரித்து, துப்பாக்கியால் சுடுவதற்கு முன் அவர்களின் மதத்தைப் பற்றிக் கேட்டனர்.
சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை அடையாளம் காண சுற்றுலாப் பயணிகளை இஸ்லாமிய விசுவாசப் பிரகடனத்தை ஓதச்சொன்னார்கள். புதுமணத்தம்பதிகளின் கணவர்கள் தங்களின் மனைவிகளின் முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவொரு கிளர்ச்சி அல்ல. இதுவொரு நாடகமாகும்.
எல்லைகளுக்கு அப்பால் பாதுகாப்பாக இருக்கும் கையாட்களால் இயக்கப்பட்ட மத மேலாதிக்கத்தின் வெளிப்பாடாகும். ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் வழங்கிய நேர்காணலின்போது, பாகிஸ்தான் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளித்ததை ஏற்றுக்கொண்டமை வெளிப்படுத்தப்பட்டது. அதாவது அவர் மேற்கத்திய நாடுகளின் 'அழுக்கு வேலைகளை' தாங்கள் செய்ததாகக் குறிப்பிட்டார்.
அந்த நேர்காணலில் சாதாரணமாகக் கூறப்பட்ட அந்த ஒப்புதலானது, தெற்காசிய பயங்கரவாதத்தின் நவீன வரலாற்றில் மிக முக்கியமான வாக்கு மூலங்களில் ஒன்றாகும். முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃபும் பல ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்றதொரு பகிரங்க ஒப்புதலை வழங்கியிருந்தார்.
தனது அரசாங்கம் காஷ்மீரில் செயற்படுவதற்காக தீவிரவாதக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்ததாகவும், இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்க விரும்புவதால் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
ஒரு காலத்தில் இரகசியமாகப் பேசப்பட்ட மேற்படி விடயம் இப்போது பகிரங்கமாகச் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றது. பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதத்தின் உலகளாவிய தடம் நீண்டு கொண்டே செல்கிறது. பஹல்காம் படுகொலைக்கு சில வாரங்களுக்கு முன்பு, 2008 மும்பை தாக்குதல்களுக்கு ஆதரவளித்ததற்காக அமெரிக்காவில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் இராணுவ அதிகாரி தஹவூர் ராணாவை இந்தியா நாடு கடத்தியிருந்தது.
அந்த வழக்கை பாகிஸ்தானின் நீதித்துறை தசாப்தத்திற்கும் மேலாக மறைத்து வைத்திருந்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஐ.நா பாதுகாப்பு சபை வெளியிட்ட அறிக்கையில் டி.ஆர்.எப் பற்றிய எந்தக் குறிப்புக்களும் வெளிப்படுத்தப்படாம் பாகிஸ்தான் அதனை வெற்றிகரமாகத் தடுத்திருந்தது.
மேற்படி செயல்கள் பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஒரு நாட்டின் செயற்பாடுகள் அல்ல.
மாறாக, பயங்கரவாதத்தை முகாமை செய்யும் ஒரு நாட்டின் செயல்களாகும். இவ்வாறான நிலையில் இந்தியாவின் பதில் விரைவாக அளிக்கப்பட்டது. 2025 மே 6-7 திகதிகளில் நள்ளிரவில், இந்தியா 'ஒபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையை முன்னெடுத்தது. 25 நிமிடங்களில் 24 துல்லியமான ஏவுகணைகளை ஏவி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் கட்டளை மையங்களை அழித்தது.
இந்தத் தாக்குதல்கள் பகவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம் மற்றும் முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்டப் பயிற்சி மையத்தைத் தாக்கின.
இலங்கையைப் பொறுத்தவரை, இந்தத் தாக்குதல் கதை மிகவும் பரிச்சயமானது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பாளர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிடமிருந்து சித்தாந்த உந்துதலைப் பெற்றிருந்தனர். நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பரவியிருக்கும் வலைப்பின்னல்கள் மூலம் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டனர்.
கிறிஸ்தவத்தின் புனிதமான நாளில் தேவாலயங்களைக் குறிவைத்ததும் —சுற்றுலா காலத்தில் புல்வெளியில் இந்துசமய சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்ததும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இரண்டு தாக்குதல்களுமே மதத்தை ஆயுதமாக்கியவையே. இரண்டுமே மகிழ்ச்சி, பிரார்த்தனை மற்றும் அமைதியுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்தே நிகழ்த்தப்பட்டன.
இரண்டுமே சுற்றுலா மற்றும் பொது நம்பிக்கையைச் சார்ந்திருக்கும் பொருளாதாரங்களைச் சீர்குலைப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை. ஈஸ்டர் துயரத்தைத் தொடர்ந்து வந்த மாதங்களில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் ஐஎஸ்ஐஎஸ் புதிய கிளைகளை அறிவித்தது.
இந்த அறிவிப்பானது, தெற்காசியா நாடு கடந்த பயங்கரவாத வலைப்பின்னல்கள் ஆதிக்கம் செலுத்தும் இடங்களாக மாறி வருவதைக் குறிக்கிறது. பஹல்காம்; கற்பிப்பதையே ஈஸ்டர் ஞாயிறு ஏற்கனவே கற்பித்திருந்தது. பயங்கரவாதம் உருமாறுகிறது, மீள்பெயரிடப்படுகிறது.
பெரும் கொலைகளின் சூத்திரதாரிகளுக்கு பகிரங்கமாக அடைக்கலம் கொடுக்கும் ஒரு நாட்டை எதிர்கொள்ளும் போது சர்வதேச சமூகம் மறதியையோ அல்லது இராஜதந்திர கண்ணியத்தையோ கொண்டிருக்க முடியாது. நீதியை நோக்கிய இலங்கையின் மெதுவான பயணத்தைத் தொடரும் வேளையில், பைசரன் பள்ளத்தாக்கின் குடும்பங்களுடன் முழு ஒற்றுமையுடன் நிற்க வேண்டியதும் தவிர்க்க முடியாதது.
அவர்களின் இழப்பு எமது இழப்புக்களுக்க நிகரானவையே. அவர்களின் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கையானது, இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு அமைதியை விரும்பும் நாடும் உரக்க, ஒன்றிணைந்து, தாமதமின்றி எதிரொலிக்க வேண்டியதை தவிர்க்க முடியாத கடமையாக்கியுள்ளது.
