அமெரிக்காவில் போட்டி: மெக்சிகோவில் தரையிறங்கியுள்ள ஈரானின் உலகக் கோப்பை கால்பந்து அணி!
ஈரானின் உலகக் கோப்பை கால்பந்து அணி மெக்சிகோவில் உள்ள டிஹுவானா (Tijuana) நகரில் தரையிறங்கியுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக துருக்கியில் பயிற்சி பெற்று வந்த ஈரானிய அணி, அங்கிருந்தே நேற்று மெக்சிக்கோ வந்துள்ளது.
தங்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய விசா கிடைக்குமா என்பதில் நிலவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக, ஈரானிய கால்பந்து சம்மேளனம் , பேச்சுவார்த்தை நடத்தி, தங்களின் முதன்மைப் பயிற்சி முகாமை அரிசோனாவில் இருந்து மெக்சிகோவிற்கு மாற்றியது.
ஈரான் அணி விளையாடவிருக்கும் முதல் போட்டிக்கு வெறும் 10 நாட்களே இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து வீரர்களுக்கும் அமெரிக்கா விசா வழங்கியது.
எனினும், முக்கிய மேலாண்மை மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் உட்பட உதவிப் பணியாளர்கள் (Support squad) பலருக்கு விசா வழங்கப்படவில்லை.
ஈரான் அணி தனது குழு அளவிலான (Group stage) அனைத்துப் போட்டிகளையும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் விளையாடவிருந்த போதிலும், இந்தத் தொடர் முழுவதும் அவர்கள் மெக்சிகோ நகரிலேயே தங்கியிருப்பார்கள்.
அதாவது போட்டியில் பங்கேற்றுவிட்டு அவர்கள் மீண்டும் மெக்சிக்கோ திரும்புவார்கள்.
அவர்கள் அமெரிக்காவில் விளையாடும் போது, உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக, தங்களோடு போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அணியை நடத்தும் நாடு வரவேற்கும் நிகழ்வாக இது அமையும்.
ஈரானிய அணி துருக்கியின் அந்தல்யா (Antalya) நகரில் உள்ள பயிற்சி முகாமில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களை செலவிட்டது.
அந்த நேரத்தைப் பயன்படுத்தி, உலகக் கோப்பையை கூட்டாக நடத்தும் மூன்று நாடுகளுக்கான விசாக்களுக்கு அவர்கள் விண்ணப்பித்தனர்.
உலகக் கோப்பைக்கான FIFA விதிகளின்படி, போட்டி நடைபெறுவதற்கு முந்தைய நாள், போட்டி நடக்கும் மைதானத்தில் அணியின் பயிற்சியாளர் செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என்பது கட்டாயமாகும்.
ஈரானிய கால்பந்து சம்மேளனத்தலைவர் மெஹ்தி தாஜ் என்பவருக்கும் விசா மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்த முடிவை “விளையாட்டில் அரசியல் தலையீட்டின் மிக மோசமான வடிவம்” என்று சம்மேளனம் விவரித்துள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க நிர்வாக அதிகாரி ஒருவர்,
“விளையாட்டு வீரர்கள் மற்றும் தேவையான உதவிப் பணியாளர்கள் உட்பட, ஈரான் உலகக் கோப்பையில் போட்டியிடுவதற்குத் தேவையான விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன” என்பதை உறுதிப்படுத்தினார்.
விசா மறுக்கப்பட்டவர்கள் குறித்த விவகாரத்தை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசிய அந்த அதிகாரி, “தவறான காரணங்களைக் கூறி பயங்கரவாதிகளை அமெரிக்காவிற்குள் கடத்துவதற்கு ஈரானிய அணி இந்த முறையைத் தவறாகப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டார்.
Group G பிரிவில் உள்ள ஈரான் அணி, ஜூன் 15 மற்றும் 21 ஆகிய திகதிகளில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நியூசிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளையும், அதைத் தொடர்ந்து ஜூன் 26 அன்று சியாட்டில் நகரில் எகிப்து அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.