உலகக் கிண்ண கால்பந்து: ஆஸி. அணியில் இலங்கை வம்சாவளி வீரர் நிஷான் வெலுபிள்ளை தெரிவு!
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான அவுஸ்திரேலியாவின் 26 பேர் கொண்ட இறுதி அணியில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நிஷான் வெலுபிள்ளை (Nishan Velupillay) இடம்பிடித்துள்ளார்.
இதன்மூலம் கால்பந்தாட்ட உலகின் மிகப்பெரிய அரங்கில் இலங்கை வம்சாவளி வீரர் ஒருவர் தடம் பதிக்கும் வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
24 வயதான நிஷான் வெலுபிள்ளை, தற்போது 'மெல்பேர்ன் விக்டரி' (Melbourne Victory) அணிக்காக விளையாடி வரும் ஒரு சிறந்த விங்கர் (Winger) ஆவார்.
மெல்பேர்னில் பிறந்த நிஷானின் தந்தை இலங்கைத் தமிழ் பின்னணியைக் கொண்ட மலேசியர் ஆவார். அவரது தாய் ஆங்கிலோ-இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
சீனாவுக்கு எதிரான தனது அறிமுக சர்வதேச போட்டியிலேயே நிஷான் கோல் அடித்து அசத்தினார். அவுஸ்திரேலியா உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறுவதற்கான போட்டிகளில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் (Socceroos) பயிற்சியாளர் டோனி போபோவிக், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள இந்தத் தொடருக்கான அணியை அறிவித்துள்ளார்.
நிஷானின் இந்தத் தெரிவு உலகெங்கிலும் உள்ள இலங்கை மற்றும் தமிழ் சமூகத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் பின்னணியைக் கொண்ட இளம் வீரர்களுக்கு இது ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ள உலகக் கிண்ணத் தொடரில், அவுஸ்திரேலிய அணியின் முன்களத் தாக்குதல் வரிசையில் நிஷான் முக்கிய வீரராகச் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.