தீக்கிரையாகிய முதியோர் இல்லம் பதிவுசெய்யப்படவில்லை; உரிமையாளருக்கு 11ஆம் திகதி வரை விளக்கமறியல்

தீ பரவியதும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், ஹொரணை தீயணைப்புப் பிரிவினரும் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

தீக்கிரையாகிய முதியோர் இல்லம் பதிவுசெய்யப்படவில்லை; உரிமையாளருக்கு 11ஆம் திகதி வரை விளக்கமறியல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்திருந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முதியோர் இல்லம் எந்தவோர் அரச நிறுவனத்தின் கீழும் பதிவு செய்யப்படாதது என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே உறுதிப்படுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவலாக அறியப்பட்ட இந்த பராமரிப்பு மையம், அங்கு தங்கியிருந்தவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சேவைகள் தொடர்பான வீடியோக்கள் காரணமாக பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. எனினும், அதன் நிர்வாக மற்றும் சட்டபூர்வ நிலைமை குறித்து தற்போது பல கேள்விகள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நேற்று முன்தினம் மாலை சுமார் 5.10 மணியளவில் இந்த மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவியதும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், ஹொரணை தீயணைப்புப் பிரிவினரும் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட வேளையில், குறித்த மையத்தில் மனநலக் குறைபாடுகளுடன் கூடிய பல்வேறு வயதுடைய 70 பேர் தங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 52 பேர் அப்பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மேலும், தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 8 பேர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதேவேளை, தீ விபத்தின் போது கட்டிடத்துக்குள் சிக்கிக் கொண்ட 10 பேரை உயிருடன் மீட்க முடியாமல் போனது. தீ அணைக்கப்பட்ட பின்னர் அவர்களின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த தீ விபத்தில் முதியோர் இல்லம் முழுமையாக சேதமடைந்துள்ளது. சம்பவத்தின் தீவிரத்தை அடுத்து பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்த கொட்டஹச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை பார்வையிட்டனர்.

விபத்தில் காயமின்றி மீட்கப்பட்டவர்கள் உடனடியாக படகொட ஆரம்பப் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். பின்னர் நேற்றுக் காலை இராணுவத்தின் உதவியுடன் அவர்கள் கல்பாத பகுதியில் உள்ள மற்றொரு பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டனர்.

இதற்கிடையில், ஹொரணை பிரதான நீதவான் நேற்றுக் காலை சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார். அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளும் அங்கு சென்று ஆய்வுகளை முன்னெடுத்தனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், நீர் மோட்டார் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த மல்டி பிளக்கில் ஏற்பட்ட மின் கசிவே தீ பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், அந்த இடத்திற்கு அருகில் சுமார் 80 மெத்தைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் தீப்பற்றி வேகமாக பரவியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக முதியோர் இல்லத்தை நடத்தி வந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, குறித்த மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அங்கு தங்கியிருந்தவர்களின் உறவினர்களும் நேற்று சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை பார்வையிட்டனர்.

இந்த பேரழிவு சம்பவம், நாட்டில் இயங்கி வரும் முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களின் பதிவு, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முறைகள் குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT