கொலம்பியாவில் கோர விபத்து: 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 66 பேர் பலி!
கொலம்பிய விமானப்படை வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிக மோசமான வான்வழி விபத்து அரங்கேறியுள்ளது. ஈக்வடார் மற்றும் பெரு நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள புவேர்ட்டோ லெகுயிசாமோ (Puerto Leguízamo) பகுதியிலிருந்து, 110 ராணுவ வீரர்கள் மற்றும் 10 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 125 பேருடன் சி-130 ஹெர்குலஸ் (C-130 Hercules) ரக விமானம் புறப்பட்டது.
ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், நகரின் மையப்பகுதியிலிருந்து வெறும் 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியதால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், சிதறிக்கிடக்கும் விமானப் பாகங்களுக்கு இடையே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பலரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. மேலும், அடர்ந்த காடு என்பதால் மீட்புப் பணிகளில் பெரும் சவால்கள் நீடிக்கின்றன.
இந்த விமான விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து கொலம்பியா பாதுகாப்புத் துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இயந்திரக் கோளாறு காரணமா அல்லது வானிலை மாற்றமா என்பது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்தின் போது விமானத்தில் இருந்த பல ராணுவ வீரர்கள் இன்னும் மாயமாகி உள்ளதாகக் கூறப்படும் நிலையில், தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்லையோரப் பாதுகாப்புப் பணிக்காகச் சென்ற வீரர்கள் இத்தகைய விபத்தில் சிக்கியது கொலம்பியா ராணுவ வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
