சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் அனுமதி - பொலிஸ்மா அதிபருக்கு மனைவி கடிதம்
முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலான இவர், நேற்று இரவு வைத்திய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த வேளையில், மனிதாபிமானமற்ற நடத்தைக்கு உள்ளாகியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து சுயாதீன குற்றப் புலனாய்வு நடத்துமாறு கோரி சலேவின் மனைவி ஐ.ஜி.பி.க்கு கடிதம் எழுதிய சில மணித்தியாலங்களிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான சுரேஷ் சலே, கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரின் சட்டத்தரணிகள் இவரது உடல்நிலை மற்றும் தடுப்புக்காவல் நிலைமைகள் குறித்து நீதிமன்றில் கவலையை வெளியிட்டிருந்தனர். உதய கம்மன்பில, சல்லே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகக் கூறுகிறார்.இந்தக் குற்றச்சாட்டுகளை பொலிஸார் மறுத்துள்ளனர்.