சமீபத்திய பேரழிவு ஓர் எச்சரிக்கை: தேவையற்ற மனித செயல்களின் விளைவு – ஆதிவாசிகளின் தலைவர்

இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்தும் போது அதன் நண்பர்களும் எதிரிகளும் என வேறுபாடின்றி அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆதிவாசிகளின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

டிசம்பர் 20, 2025 - 17:16
டிசம்பர் 20, 2025 - 17:17
சமீபத்திய பேரழிவு ஓர் எச்சரிக்கை: தேவையற்ற மனித செயல்களின் விளைவு – ஆதிவாசிகளின் தலைவர்

திட்டமிடப்படாத வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் இயற்கைக்கு முரணான மனித செயல்பாடுகளே நாட்டில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளுக்குக் காரணம் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார். 

இயற்கையை மனிதன் கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணமே இத்தகைய பேரழிவுகளுக்குத் தொடக்கமாக அமைந்துள்ளதாகவும், மனிதன் எப்போதும் இயற்கையின் கட்டுப்பாட்டிற்குள் வாழ வேண்டியவன் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனது பகுதி நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவுகள், பாறை சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன், மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சுற்றுலாத் துறையை நம்பி வாழ்ந்த தனது குலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது கடுமையான வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும், பேரழிவுக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

புயல் மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மனித மற்றும் பொருளாதார இழப்புகள் எதிர்காலத்தில் மேலும் தீவிர பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். பலர் மண் மேடுகள் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவங்கள், மனிதன் இயற்கையை அலட்சியப்படுத்தியதன் விளைவு என அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக கன்னி காடுகளால் மூடப்பட்டிருந்த மலைத்தொடர்கள் சீரற்ற வளர்ச்சித் திட்டங்களுக்காக அழிக்கப்பட்டதாலேயே இத்தகைய பேரழிவுகள் அதிகரித்துள்ளதாகவும், இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்தும் போது அதன் நண்பர்களும் எதிரிகளும் என வேறுபாடின்றி அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆதிவாசிகளின் தலைவர் சுட்டிக்காட்டினார். இது மனிதகுலத்துக்கு இயற்கை அளிக்கும் கடுமையான பாடம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!