வெலிகந்தை துப்பாக்கிச்சூடு தொடர்பில் இன்னும் விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை
நியூஸ்21 (கொழும்பு) - பொலன்னறுவை, வெலிகந்தைப் பகுதியில் கத்தியுடன் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் மீது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 வயதான நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அத்துடன், அது தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் நடைபெற்றது.
இதன்போது, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சரவை பேச்சாளர் இதனைக் கூறினார்.
நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் இவ்வாறான சம்பவம் நடைபெறுவதில்லை என்றும், இந்தச் சம்பவம் கவனம் செலுத்த வேண்டிய சம்பவம் என்றும், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெலிக்கந்தை பகுதியில் நேற்று (12) மாலை மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவிட்ட நிலையில், குறித்த மோட்டார் சைக்கிள், பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதுடன், பின்னர் அதன் செலுத்துனர் வீட்டிற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, ,குறித்த நபர் கத்தியால் பொலிஸாரைத் தாக்க முயற்சித்துள்தாக தெரிவிக்கப்படுவதுடன், இதனையடுத்து, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
ப. பிறின்சியா டிக்சி