பாடசாலை மதில் இடிந்து மாணவர்கள் மூவர் காயம்; ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடம்
சம்பவத்தில் ஈடுபட்ட பெக்கோ இயந்திரம் கொழும்பு மாநகர சபையின் பணிப்பிரிவுக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொரளை பகுதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். புனரமைப்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் மதில் சுவரில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்த இடத்திற்கு அருகில் நின்றிருந்த மூன்று மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த மாணவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அச்சமயம் பாடசாலை மைதானத்தில் இருந்த 16 வயதுடைய மூன்று மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக 48 வயதுடைய பெக்கோ இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட பெக்கோ இயந்திரம் கொழும்பு மாநகர சபையின் பணிப்பிரிவுக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.