உறுதியானது திருமணம்: ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் அறிவித்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி!
ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடிகளாகக் கருதப்படும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் குறித்த வதந்திகளுக்கு தற்போது அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
'கீதா கோவிந்தம்' படத்தில் இணைந்தபோது தொடங்கிய இவர்களது நட்பு, காதலாக மலர்ந்ததாக நீண்டகாலமாக கிசுகிசுக்கப்பட்டது. ரகசிய டேட்டிங் மற்றும் சுற்றுலா புகைப்படங்கள் மூலம் ரசிகர்களால் 'VIROSH' என அழைக்கப்பட்ட இந்த ஜோடி, இதுவரை தங்கள் உறவு குறித்து மௌனம் காத்தே வந்தனர்.
சமீபத்தில் ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், திருமண அழைப்பிதழ் கசிந்ததாகவும் வெளியான செய்திகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவின. இத்தகைய சூழலில், ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர்கள், "நாங்கள் முடிவெடுப்பதற்கு முன்பே எங்களை ஆசீர்வதித்து, 'VIROSH' என்ற பெயரையும் சூட்டிய ரசிகர்களுக்கு நன்றி. உங்கள் அன்பிற்கு மரியாதை அளிக்கும் வகையில் எங்களது இணைப்பை 'VIROSH திருமணம்' என அழைக்க விரும்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பல வருடங்களாக நீடித்த மர்மம் விலகி, இவர்களது திருமணச் செய்தி உறுதியாகியுள்ளது.