கோவை மாணவி வழக்கு: இறுதி கட்ட விசாரணை நிறைவு – தீர்ப்பு தேதி விரைவில் அறிவிப்பு
மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி மீது கோவையில் நடந்த கொடூர தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி மீது கோவையில் நடந்த கொடூர தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி இரவு நடந்ததாக கூறப்படுகிறது. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி, தனது ஆண் நண்பருடன் விமான நிலையம் பின்புறப் பகுதியில் இருந்தபோது, மூன்று இளைஞர்கள் அவர்களைத் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆண் நண்பர் கடுமையாக காயமடைந்த நிலையில், மாணவி கடத்தப்பட்டு கத்தியின் முனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலுக்குப் பிறகு மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் காவல்துறையில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்த இளைஞருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, துடியலூர் பகுதியில் பதுங்கி இருந்ததாக கூறப்படும் கருப்பசாமி (A1), காளீஸ்வரன் (A2), தவசி (A3) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் சுமார் 150 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களின் பதிவு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இன்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அரசு தரப்பு வாதங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து எதிர் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு, நீதிபதி தீர்ப்பு வழங்கும் தேதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கின் தீர்ப்பு சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்காக பலரும் காத்திருக்கின்றனர்.