ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? வெளியான தகவல் இதோ!
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, UGC புதிய விதிமுறைகளை ஜனவரி 6 அன்று வெளியிட்டது.

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, UGC புதிய விதிமுறைகளை ஜனவரி 6 அன்று வெளியிட்டது.
அதன்படி அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு நெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் இல்லை என்று யுஜிசி புதிய வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை 2020-ன்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை, வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2018 விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு, புதிதாகக் கொண்டு வரப்போவதாக வரைவறிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன. தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்விப் பணியாளர்களுக்கான பணியாளர் விகிதம், தகுதிகாண் காலம் மற்றும் உறுதிப்படுத்தல், விடுப்புகள், கற்பித்தல் நாட்கள், கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிர்வாக உறுதிமொழிகள், மூத்த பதவி மற்றும் தொழில்முறை நெறிமுறைகள் குறித்த வரைவு வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டது.
உயர்கல்வி விடுமுறை
ஆரம்ப நிலையில் உள்ள இளம் உதவிப் பேராசிரியர்கள், கல்வி கற்பதற்காக அதிகபட்சம் 3ஆண்டுகள் வரை விடுமுறை எடுக்கலாம். எனினும் அவர்கள் அதற்குக் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
ஓய்வுக்கால விடுமுறை
அதேபோல நிரந்தர ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் ஓராண்டு வரை தனிப்பட்ட அல்லது தொழில்நுட்பக் காரணங்களுக்காக ஓய்வுக்கால விடுமுறை அளிக்கப்படும். எனினும் அதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
தற்செயல் விடுப்பு
ஆசிரியர்கள் ஒவ்வோர் ஆண்டும் அதிகபட்சம் 8 நாட்கள் கேஷுவல் லீவ் எனப்படும் தற்செயல் விடுப்பை எடுத்துக்கொள்ளலாம்.
ஈட்டிய விடுப்பு
Earned Leave எனப்படும் ஈட்டிய விடுப்புக்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதேபோல அதிகபட்சம் 300 நாட்கள் ஈட்டிய விடுப்பைப் பெறலாம். வேலையில் 1/30 விகிதத்தில் இந்த விடுமுறை உருவாக்கப்படும்.
மகப்பேறு விடுமுறை
பெண் ஆசிரியர்களுக்கு 180 நாட்கள் அதாவது, 6 மாதத்துக்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்பட உள்ளது. தங்களுடைய வேலை நாட்களில் இரு முறை இந்த விடுமுறையை ஆசிரியர்கள் பெற முடியும்.
கல்வி வளர்ச்சி மற்றும் வேலை - தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைக்குக் கொண்டு வரும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது.