தெவுந்தர துப்பாக்கிச் சூடு: பொலிஸ் பாதுகாப்பு இருந்தபோதும் ‘டிலைட்’ சுட்டுக்கொலை – வெளியான புதிய தகவல்கள்

பொலிஸார் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தபோதிலும், அவர் பல இடங்களுக்கு சுதந்திரமாகச் சென்று வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற நாளில் அவர் கந்தரவிலிருந்து தெவுந்தரவுக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

பெப்ரவரி 22, 2026 - 07:56
தெவுந்தர துப்பாக்கிச் சூடு: பொலிஸ் பாதுகாப்பு இருந்தபோதும் ‘டிலைட்’ சுட்டுக்கொலை – வெளியான புதிய தகவல்கள்

தெவுந்தர பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்த நிலையிலும், பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிற்பகல் சுமார் 1 மணியளவில் காரில் வந்த இருவர் 9 மி.மீ துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் “டிலைட்” என அழைக்கப்படும் 55 வயதுடைய மீன் வியாபாரியான சிரில் ஹெந்தவிதாரண உயிரிழந்தார்.

2023 ஆம் ஆண்டு அவருக்குச் சொந்தமான ஒரு ஹோட்டலிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. ஆனால் அப்போது அவர் உயிர் தப்பியிருந்தார். உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணைகுழுவை அணுகியதாகவும், அதனைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தபோதிலும், அவர் பல இடங்களுக்கு சுதந்திரமாகச் சென்று வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற நாளில் அவர் கந்தரவிலிருந்து தெவுந்தரவுக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் காரில் வந்து தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், மாத்தறை – அமலகொட பகுதியில் அந்த கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களைக் கைது செய்ய 6 பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நபர் போதைப்பொருள் மற்றும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது சகோதரரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தேடப்படும் நபர் என கூறப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!