ஹோர்முஸ் நீரிணையில் UAE எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு; 8 பேர் காயம்!

இந்தச் சம்பவம், ஏற்கெனவே பதற்றம் நிலவி வரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
ஹோர்முஸ் நீரிணையில் UAE எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு; 8 பேர் காயம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு (UAE) சொந்தமான இரு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அந்நாட்டு அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, காயமடைந்த எட்டு பேரில் நால்வரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் அறுவர் இந்தியப் பிரஜைகளும், இருவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களும் ஆவர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தாக்குதலுக்கு உள்ளானவை 'மொம்பாசா' (Mombasa) மற்றும் 'அல் பஹியா' (Al Bahia) என்ற இரண்டு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் ஆகும். இக்கப்பல்கள் ஓமான் கடல் எல்லையை ஒட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இந்திய ஊழியர் 'மொம்பாசா' கப்பலில் பணியாற்றியவர் என்றும் அதிகாரப்பூர்வ தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் விளைவாக இரண்டு கப்பல்களிலும் தீப்பரவல் ஏற்பட்டதுடன், அவற்றுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தச் சம்பவத்தை ஐக்கிய அரபு இராஜ்ஜியம் "இது வெட்கக்கேடான தாக்குதல்" என்று கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி அளிக்கும் முழு உரிமையும் தமக்கு இருப்பதாக வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியம் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், தேசிய பாதுகாப்பை சீர்குலைக்க முயற்சிக்கும் எந்தச் செயலுக்கும் கடுமையான பதிலடி வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம், ஏற்கெனவே பதற்றம் நிலவி வரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.

Click for more latest மத்திய கிழக்கு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -