இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி பயணம்: பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு!
கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளுக்கு மிக முக்கிய அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறார்.
தனது பயணத்தின் முதல் கட்டமாக நாளை மறுநாள் இந்தியா வரும் அவர், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்தப் பயணத்தின் போது இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா செல்லும் மார்க் கார்னி, அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பேனீசைச் சந்திப்பதோடு, கான்பெர்ரா நகரில் உள்ள நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுகிறார்.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா பிரதமர் ஒருவர் ஆஸ்திரேலியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக ஜப்பானின் டோக்கியோ நகருக்குச் செல்லும் அவர், ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி சனேவைச் சந்தித்துப் பேசுகிறார்.
இந்த மூன்று நாடுகளின் சுற்றுப்பயணத்தின் மூலமாக வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர் விரிவான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.
