9 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை அமல்: ஜோர்டானில் 6 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
ஜோர்டானில் பாதுகாப்பு படையினரை கொலை செய்த குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஜோர்டானில் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான ஒன்பது ஆண்டுகால இடைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு காரணமான பயங்கரவாதம் மற்றும் கடுமையான குற்ற வழக்குகளில் இந்த ஆறு பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்ததாக அரசு செய்தித் தொடர்பாளர் முகமது மொமானி தெரிவித்துள்ளார்.
தண்டனை பெற்றவர்களில் இருவர், 2018-ஆம் ஆண்டு சால்ட் நகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய நடவடிக்கையின்போது ஆறு அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர், 2022-ஆம் ஆண்டு எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களின் போது மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
மற்றவர்கள் ஆயுத மோதல்கள் நடைபெற்ற காலகட்டங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்ட போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டானில் தற்போது 100-க்கும் மேற்பட்டோர் மரண தண்டனை கைதிகளாக இருப்பதாகவும், சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப தண்டனைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்காக உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜோர்டான் அரசு கூறியுள்ளது.
ஜோர்டான் பொதுவாக மரண தண்டனையை அரிதாகவே பயன்படுத்தி வந்த நிலையில், கடுமையான வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் மட்டுமே அதை அமல்படுத்தி வந்தது. கடைசியாக 2017-ஆம் ஆண்டு 15 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.