ஈரான் போரில் டிவிஸ்ட்: இரவோடு இரவாக பாகிஸ்தானுக்குக் கிளம்பும் ஈரான் வெளியுறவு அமைச்சர் - திடீர் பயணம் ஏன்?
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சிறிய குழுவுடன் வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்கிறார். அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முக்கியப் படியாக இந்தப் பயணம் கருதப்படுகிறது. ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்த கடற்படைத் தடை மற்றும் ஈரானின் எதிர்த் தடை போன்றவற்றால் உருவான பதற்றத்தைக் குறைக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்க துணை அதிபர் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் இப்போது மத்தியஸ்தமாகச் செயல்படுகிறது. தடை நீக்கப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை என்ற ஈரானின் நிலைப்பாடு தொடர்ந்தாலும், வெள்ளிக்கிழமை காலை நடந்த தொலைபேசி உரையாடல்களை அடுத்து இந்தப் பயணம் ஒப்புதல் பெற்றுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஒரு சிறிய குழுவுடன் வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளார். இந்தத் திடீர் இரவுப் பயணம், அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு முக்கியமான படியாக பாகிஸ்தான் மற்றும் ஈரான் அதிகாரிகளால் கருதப்படுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கிலும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்த முடிவுகளை எட்டுவதற்குமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காகவே இந்தப் பயணம் அமைந்துள்ளது.
பாகிஸ்தான் அரசின் மூத்த அதிகாரிகள் அல் ஜசீராவிடம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினர். வெள்ளிக்கிழமை அராக்சி பாகிஸ்தான் தலைவர்களுடன் தொலைபேசி மூலம் பல உரையாடல்களை நடத்திய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இஸ்லாமாபாத் இப்போது ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைக்கான முக்கிய மையமாக மாறியுள்ளது. அராக்சி தலைமையிலான சிறிய குழு வெள்ளிக்கிழமை இரவு ஈரானில் இருந்து கிளம்பி பாகிஸ்தானுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய முயற்சிக்கு முன் பல சிக்கல்கள் இருந்தன. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் தலைமையிலான குழு இந்த வாரத் தொடக்கத்தில் இஸ்லாமாபாத் வருவதாக இருந்தது. ஆனால் ஈரான் தரப்பு, தனது துறைமுகங்களுக்கு அமெரிக்கா விதித்த கடற்படைத் தடையை நீக்காவிட்டால் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என்று மறுத்துவிட்டது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த முடிவும் இல்லாமல் முடிவடைந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஏப்ரல் 13 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை மூலம் தடையை அமல்படுத்தினார்.
இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது, தடையை நீக்கினால் மட்டுமே தாங்கள் பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என்று ஈரான் தரப்பு மீண்டும் வலியுறுத்தியது. ஆனால் ட்ரம்ப் அந்தக் கடற்படைத் தடையை நீக்க மறுத்துவிட்டார்.
இதனால் பேச்சுவார்த்தை வாய்ப்பு தற்காலிகமாகத் தடைபட்டிருந்தது. ஈரான் மார்ச் மாதம் முதல் ஹார்முஸ் நீரிணையில் பெரும்பாலான கப்பல்களுக்குத் தடை விதித்திருந்தது என்பதும், அமெரிக்கா தடை விதித்ததும் ஈரான் கப்பல்களுக்கும் செல்ல தடை ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில், அராக்சி பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினார். ஈரான் அரசு செய்தி நிறுவனம், அராக்சிக்கும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீருக்கும் இடையே உரையாடல் நடைபெற்றதாகத் தெரிவித்தது. இருப்பினும் பாகிஸ்தான் அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
பாகிஸ்தான் அதிகாரிகள் ஒருவர் அல் ஜசீராவிடம், "அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி திரும்ப அதிகப்படியான வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளார். பல நாட்களாக அதிகரித்து வந்த பதற்றத்திற்குப் பின்னர் இந்த நம்பிக்கை மீண்டும் எழுந்துள்ளது. இருப்பினும், அமெரிக்கா தரப்பு இன்னும் பாகிஸ்தானுக்குப் புதிய குழுவை அனுப்புவது குறித்து உறுதிப்படுத்தவில்லை.
ஹார்முஸ் நீரிணை, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையாகும். அங்கு ஏற்படும் சிறிய இடையூறும் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும். தற்போது ஏறத்தாழ 55 நாட்களாக மொத்தப் பாதையும் முடங்கியுள்ளது.
இந்தச் சூழலில், ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்பது உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்தப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
