ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு: ஈரான் திடீர் முடிவின் பின்னணி என்ன?
மத்திய கிழக்கில் கடந்த சில வாரங்களாக பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பிரச்சினையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீரிணையை மீண்டும் திறப்பதாக ஈரான் அறிவித்ததுடன், அதன்படி சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதல்கள் உலகளவில் கவலை ஏற்படுத்தியிருந்தன. இந்த பதற்றம் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்தையும் பாதித்து, சர்வதேச சந்தையில் அழுத்தத்தை அதிகரித்தது. உலக எரிசக்தி விநியோகத்தில் முக்கிய இடம் வகிக்கும் இந்த நீரிணை முடங்கியதால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா–ஈரான் இடையே 15 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது, நீரிணையை திறக்க ஈரான் ஒப்புக் கொண்டது. ஆனால், இஸ்ரேல் லெபனான் மீது மேற்கொண்ட தாக்குதலுக்குப் பிறகு, ஆத்திரமடைந்த ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதனால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மீண்டும் தடைகள் ஏற்பட்டன.
இதற்கிடையில், அமெரிக்க முன்னாள் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானை கடற்படையால் முற்றுகையிடலாம் என எச்சரித்தது நிலையை மேலும் பதற்றமடையச் செய்தது. இதனால் சீனா போன்ற நாடுகளும் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டன.
இந்நிலையில், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், லெபனான் போர் நிறுத்தத்தை முன்னிட்டு, அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், போர் நிறுத்த காலம் முடியும் வரை இந்த போக்குவரத்து தடையின்றி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
