ஹர்முஸில் பதற்றம் அதிகரிப்பு: அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரம் - 80 இலக்குகளை குறிவைத்து பதிலடி தாக்குதல்
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் மேலும் ஒரு புதிய கட்டத்திற்கு நுழைந்துள்ளது. ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானிய படைகள் மூன்று சரக்கு கப்பல்கள் மீது நடத்திய ஏவுகணை தாக்குதல், அமெரிக்காவின் கடும் பதிலடி நடவடிக்கைக்கு வித்திட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் இருந்து இந்த மோதல் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க நலன்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கியமான ஹர்முஸ் ஜலசந்தியை மூடும் நடவடிக்கையையும் மேற்கொண்டது.
இதன் காரணமாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் உயரத்தில் பாய்ந்தது.
பாகிஸ்தான் மற்றும் கத்தார் போன்ற நட்பு நாடுகளின் முயற்சியால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கைகோர்க்கப்பட்டது. எனினும், இந்த ஒப்பந்தத்தில் ஈரான் தனது சொந்த நிபந்தனைகளை முன்வைத்தது.
அதாவது, ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் கட்டாயக் கட்டணம் விதிக்கப்படும் என்றும், தெஹ்ரானின் அனுமதியின்றி இந்த பாதையை பயன்படுத்தும் கப்பல்கள் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஈரான் அறிவித்தது. இந்த எச்சரிக்கையை அடுத்து, கடந்த மாதத்தில் ஹர்முஸ் ஜலசந்தியை கடந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது, இது மீண்டும் அமெரிக்காவை எரிச்சலூட்டியது.
இந்நிலையில் நேற்று, ஓமன் வளைகுடாவின் லிமாஹ் பகுதிக்கு அருகில் பயணித்த மூன்று சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள் ஈரானின் போர் நிறுத்த மீறலாகவும், சர்வதேச கடல் பாதை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் அமைந்ததால், வெள்ளை மாளிகை உடனடியாக பதில் நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து இன்று, தெற்கு ஈரானின் முக்கிய பகுதிகளான சிரிக், குவாசிம் தீவு, முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவு மற்றும் மூலோபாய துறைமுக நகரான பண்டர் அப்பாஸ் ஆகிய இடங்களில் அமெரிக்க இராணுவம் பெரும் தாக்குதலை நடத்தியது.
இந்த அமெரிக்க தாக்குதல் மிகவும் திட்டமிட்டதாகவும், பரந்த நோக்கத்துடனும் அமைந்திருந்தது. ஈரானின் ரேடார் அமைப்புகள், மேம்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள், ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட மொத்தம் 80 க்கும் மேற்பட்ட முக்கியமான உள்கட்டமைப்பு இலக்குகளை அமெரிக்கா துல்லியமாக குறிவைத்து தாக்கியுள்ளது.
இந்த திடீர் ராணுவ நடவடிக்கையானது சர்வதேச சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வெடிப்பு மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றத்தை உருவாக்கி எதிர்காலத்தில் இப்பகுதியின் எண்ணெய் விநியோகம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.