புதிய அமைச்சர்கள் இருவர் நியமனம்
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், தொழிலாளர் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ் மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று (21) அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், தொழிலாளர் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, அபிவிருத்தித் திட்டங்கள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
2023 டிசெம்பரில், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளராக இருந்து நீக்கப்பட்டு, பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விகிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக வடிவேல் சுரேஷ் உறுதியளித்துள்ளார்.
அதேபோன்று கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்திருந்தார். ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்த போதிலும் அவர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.