டிட்வா புயல் உருவானது; நவம்பர் 30-ல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல்பகுதிகளில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2025) ‘டிட்வா’ என்ற பெயருடைய புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 27, 2025 - 21:17
டிட்வா புயல் உருவானது; நவம்பர் 30-ல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல்பகுதிகளில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2025) ‘டிட்வா’ என்ற பெயருடைய புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று (26.11.2025) உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இரவு நேரத்தில் மேலும் வலுப்பெற்று இன்று அதிகாலை ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. 

இது தற்போது அம்பாந்தோட்டையிலிருந்து கிழக்கு-வடகிழக்கே 130 கி.மீ., மட்டக்கிளப்பிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 120 கி.மீ., புதுவையிலிருந்து 640 கி.மீ. மற்றும் சென்னையிலிருந்து 730 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் நவம்பர் 30-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிட்வா புயல் தற்போது சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 700 கி.மீ. தொலைவில் உள்ளது. இது வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

புயலின் தாக்கத்தால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும், வட தமிழகத்தின் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை ஏற்படக்கூடும்.

கடலோர பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!