மதுபான விற்பனை நிலையங்களை சனி, ஞாயிறு மூட உத்தரவு!

நட்சத்திர வகுப்பு வரம்பிற்கு அப்பால் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வில்லாக்கள் மேற்கண்ட உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 19, 2024 - 01:40
மதுபான விற்பனை நிலையங்களை சனி, ஞாயிறு மூட உத்தரவு!

தேர்தல் வார இறுதியில் மதுபானங்களை விற்பனை செய்வது கலால் தலைவரின் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் எதிர்வரும் சனிக்கிழமை (21), மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (22)  ஆகிய இரு தினங்களில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.

இருப்பினும், 3 நட்சத்திர வகுப்பு வரம்பிற்கு அப்பால் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வில்லாக்கள் மேற்கண்ட உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் தங்களுடைய விருந்தினர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கலால் கட்டளைச் சட்டத்தை மீறும் சந்தர்ப்பங்கள் தொடர்பில், கலால் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1913க்கு பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க முடியும் எனவும் தகவல்களுக்காக 24 மணிநேரமும் திறந்திருக்கும் என கலால் திணைக்களத்தின் பேச்சாளர் சன்ன வீரக்கொடி தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!