பொகவந்தலாவையில் வெள்ளம் - விமலசுரேந்திர நீர்த்தேக்க வான்கதவுகள் திறப்பு 

சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பெய்த கடும் மழை காரணமாக பல தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் வீதிகளும் மழைநீரில் மூழ்கியுள்ளன.

ஒக்டோபர் 12, 2023 - 15:40
பொகவந்தலாவையில் வெள்ளம் - விமலசுரேந்திர நீர்த்தேக்க வான்கதவுகள் திறப்பு 

பொகவந்தலாவை பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறுகள் பெருக்கெடுத்து பாடசாலைகள் மற்றும் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பொகவந்தலாவை பிரதேசத்தில் நேற்று  (11) பிற்பகல் பெய்த கடும் மழையின் காரணமாக, பொகவந்தலாவை சென் மேரிஸ் தேசிய பாடசாலைக்கு சொந்தமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, வகுப்பறைகளிலும் நீர் நிரம்பி காணப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.

சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பெய்த கடும் மழை காரணமாக பல தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் வீதிகளும் மழைநீரில் மூழ்கியுள்ளன.

அத்தோடு, நோர்டன்பிரிட்ஜ் பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நேற்று பிற்பகல் (11) முதல் நிரம்பி வழிவதாக நீர்த்தேக்க  பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

கனமழை காரணமாக ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதிகளில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், எனவே, அவ்வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது கவனமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

(க.கிஷாந்தன்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!