தேநீர் இடைவேளையில் விபத்து: லொறி மோதி 21 வயது இளைஞன் உயிரிழப்பு
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த மற்றைய நபர், முன்னதாக கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் பத்தனை பகுதியில், தேநீர் குடிப்பதற்காக பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய இருவர் மீது லொறி மோதியதில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் கடுமையாக காயமடைந்துள்ளார். இந்த விபத்து, இன்று சனிக்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளது.
டயகம பிரதேசத்திலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், பத்தனை பகுதியில் தேநீர் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி அருகிலுள்ள தேநீர் கடைக்கு சென்றிருந்த இளைஞன் உட்பட இருவர் மீது, எதிர்த்திசையில் வேகமாக வந்த லொறி மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த மற்றைய நபர், முன்னதாக கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நாத்தாண்டிய பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறி மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.