தெல்தெனிய கொலை வழக்கு: பிரதான சந்தேகநபருக்கு உதவிய குண்டசாலை பிரதேச சபை ஓட்டுநர் கைது
தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில் குண்டசாலை பிரதேச சபையின் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸின் விசேட பொலிஸ் குழுவினர் குண்டசாலை பகுதிக்குச் சென்று இன்று (24) இந்த நபரைக் கைது செய்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கைது செய்யப்பட்டுள்ள இந்த ஓட்டுநரின் நண்பர் என்பதுடன், சந்தேகநபரின் தொலைபேசி தரவுகளின் ஊடாகவே இந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஓட்டுநர் இந்தக் கொலைக்கு எந்தளவு உடந்தையாக இருந்தார், மேலும் கொலை குறித்து அவருக்கு முன்னதாகவே தெரியுமா என்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த பெண்ணின் அடையாளம் மற்றும் கொலையின் சரியான காரணம் குறித்து மேலதிக விவரங்கள் எதுவும் பொலிஸாரால் வெளியிடப்படவில்லை.