அடகு வைத்த மோதிரங்களுக்கு பதிலாக வேறு மோதிரங்கள் – அரச வங்கியில் நகை மாறிய சம்பவம் பரபரப்பு
ஹட்டன் – டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்படும் அரச வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்ட மோதிரங்கள் மாறிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு இரண்டு மோதிரங்களை அடகு வைத்து பணம் பெற்றிருந்த நபர், இவ்வருடம் அவற்றை மீட்க வங்கிக்கு சென்றபோது பெட்டகத்திலிருந்து கொண்டு வந்த மோதிரங்கள் தன்னுடையவை அல்ல என்பதை கவனித்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்ததையடுத்து, நகைகள் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பின், தவறுதலாக வேறு நபர்களிடம் அந்த மோதிரங்கள் சென்றிருக்கலாம் என்பதால் அவற்றை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கோயா பகுதியைச் சேர்ந்த அந்த நபர் 2024 ஜனவரி 30 ஆம் திகதி தனது மோதிரத்தையும் மனைவியின் மோதிரத்தையும் அடகு வைத்து பணம் பெற்றிருந்தார். ஒரு வருடத்திற்கு பின்னர் வட்டியுடன் முழு தொகையையும் செலுத்தி மோதிரங்களை மீட்க கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி வங்கிக்கு சென்றபோது தான் இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. அந்த நேரத்தில் வங்கி முகாமையாளர் ஒரு வாரம் கழித்து வரும்படி கூறியதுடன், அவர் செலுத்திய பணத்தையும் திருப்பி வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வாரம் கழித்தும் மோதிரங்கள் கிடைக்காததால், அவர் ஹட்டன் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ய சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வங்கி கிளைக்கு மீண்டும் சென்றபோது, அந்த மோதிரங்களில் ஒன்று தவறுதலாக மற்றொரு நபரிடம் சென்றுள்ளதாகவும், அவரை தொடர்பு கொண்டு அதை மீண்டும் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வங்கி முகாமையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மற்றொரு மோதிரம் யாரிடம் சென்றுள்ளது என்பது குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.