புதிய கூட்டணி 5ஆம் திகதி அறிமுகமாகும் - வெளியான தகவல்!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜனாதிபதிக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய புதிய கூட்டணி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வெளிப்படும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜனாதிபதிக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய புதிய கூட்டணி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வெளிப்படும் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (29) பம்பலப்பிட்டி ஊடக மையத்தில் “புலுவன் ஸ்ரீ லங்கா” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (29) பிற்பகல் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றதுடன், இதில் சுமார் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
எதிர்வரும் 5ஆம் திகதி பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் புதிய கூட்டணியை அறிவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் தினேஷ் குணவர்தனவும், செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்படவுள்ளனர். கூட்டணியின் ஏனைய பதவிகள் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நியமிக்கப்பட உள்ளன.
அதன்படி, புதிய கூட்டணி சார்ப்பில் எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கு முதன்முறையாக வேட்புமனுப் படிவம் கையளிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கூட்டணி எதிர்காலத்தில் எந்த தேர்தலிலும் போட்டியிடும் என்றும், இது நாட்டின் பரந்த அரசியல் கூட்டணி என்றும் அவர் கூறினார்.