இன்றைய வானிலை 24-12-2025: மழை, கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு
நாட்டின் சில பகுதிகளில் இன்று (24) மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவிலான மழை அவ்வப்போது பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாகாணம் மற்றும் களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது. இதேவேளை, நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான மற்றும் உலர்ந்த வானிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை நேரப் போக்குவரத்தில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவிலான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று பெரும்பாலும் வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்றும், அதன் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன் காரணமாக, குறித்த கடற்பரப்புகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும், ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் மற்றும் கடற்பயணிகள் இந்த வானிலை நிலவரத்தை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

