ஜப்பான் பொதுத் தேர்தலில் சனே டக்காச்சி அபார வெற்றி – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமராக சாதனை
இந்த வெற்றியின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையை சனே டக்காச்சி படைத்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் பிரதமராக கடந்த ஒக்டோபர் மாதம் பதவியேற்ற சனே டக்காச்சிக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவு காணப்பட்டது. பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்கு குறைந்த அளவிலான பெரும்பான்மை மட்டுமே இருந்த நிலையில், தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி நடைமுறைப்படுத்தவும், தனது அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்தவும் பொதுத் தேர்தலை நடத்த தீர்மானித்தார்.
வரவு - செலவுத் திட்டம் தாக்கல் செய்ய வேண்டிய முக்கிய நேரத்தில் தேர்தலை அறிவித்தது நாட்டின் நிர்வாகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. எனினும், புதிய அரசு அமைந்த உடனேயே வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் என பிரதமர் சனே டக்காச்சி உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜப்பான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பிரதமர் சனே டக்காச்சி வெளியிட்டார். பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் LDP கட்சி 465 இடங்களில் 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையை சனே டக்காச்சி படைத்துள்ளார். அவரது இந்த அபார வெற்றிக்கு அரசியல் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.