10 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட அஸ்வெசும பணத்தை மீளப் பெற நடவடிக்கை
இந்த ஆட்சேபனைகள் மற்றும் முறையீடுகள் காரணமாக சுமார் 10,000 பேர் நிவாரணம் பெற தகுதியற்றவர்களாக மாறியுள்ளனர்.

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் முதல் கட்டத்தில் போலியான தகவல்களை வழங்கி நன்மைகளைப் பெற்றுக் கொண்டவர்களிடம் இருந்து பணத்தை மீளப்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேன்முறையீடுகளை சமர்ப்பித்த சுமார் 10,000 பேர் நிவாரணம் பெற தகுதியற்றவர்களாக உள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இதயும் படிங்க: தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்... வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
“முதலாம் கட்டத்தில் பெறப்பட்ட 1,227,000 மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளில், சுமார் 212,000 முறைப்பாடுகள் ஒரே தரப்பினரால் பல முறை செய்யப்பட்ட மேன்முறையீடுகள். எனவே, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளின் உண்மையானத் தொகை 966,000” என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுவரை, சுமார் 749,000 ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு லட்சம் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட உள்ளன.
இந்த ஆட்சேபனைகள் மற்றும் முறையீடுகள் காரணமாக சுமார் 10,000 பேர் நிவாரணம் பெற தகுதியற்றவர்களாக மாறியுள்ளனர்.
எனவே, போலியான தகவல்களின் மூலம் நிவாரணம் பெற்றுக்கொண்ட மக்களிடம் இருந்து பணத்தை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளோம்” என, இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.