தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருட்டு - பொலிஸ் விசாரணை!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவம். நீதிமன்ற உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த புறாக்கள் காணாமல் போனதால், பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

ஒக்டோபர் 7, 2025 - 11:03
ஒக்டோபர் 7, 2025 - 12:06
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருட்டு - பொலிஸ் விசாரணை!
தெஹிவளை மிருகக்காட்சிசாலை

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் இருந்த 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வார இறுதியில் இந்த திருட்டுச் சம்பவம் கண்டறியப்பட்டதாகவும், இது குறித்து தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலையில் புறாக்கள் திருடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. திருடர்கள், கூண்டுகளில் ஒன்றை உடைத்து புறாக்களை அப்புறப்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

திருடப்பட்ட புறாக்கள், பல்வேறு சட்ட நடவடிக்கைகளில் வழக்கு ஆதாரப் பொருட்களாக நீதிமன்ற உத்தரவுகளின் கீழ், மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, பறவைகள் வைக்கப்பட்டிருந்த பிரிவின் பொறுப்பு அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணை நிலுவையில் உள்ளதால், அவரது கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் சமரசேகர மேலும் தெரிவித்தார்.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும், திருடப்பட்ட புறாக்களை மீட்க விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!